Wednesday, May 31, 2006

நஜஷ் - வியாபாரத்தில் வஞ்சித்தல்

நஜஷ் என்பது பொருளை வாங்காத ஒருவர் (இவர் வியாபாரியால் நிறுத்தப் பட்டிருப்பார்) அதன் விலையை அதிகப் படுத்துவதாகும். பிறரை ஏமாற்றுவதும் படிப்படியாக அவரை அதிக விலைக்குக் கொண்டு செல்வதும் தான் இதன் நோக்கமாக இருக்கும். 'நீங்கள் வஞ்சக வியாபாரம் செய்யாதீர்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.

இது ஒரு வகையான ஏமாற்றுதலாகும் என்பதில் ஐயமில்லை. திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'சதி செய்வதும் ஏமாற்றுவதும் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளில் உள்ளவையாகும்' அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: பைஹகீ.

வியாபாரச் சந்தைகளிலும் ஏலம் நடக்கின்ற இடங்களிலும் மற்றும் வாகனக் கண்காட்சிகளிலும் உள்ள பெரும்பாலான தரகர்கள் விலக்கப்பட்ட காரியங்களை அதிகம் செய்வதால் அவர்களின் சம்பாத்தியம் ஹராமானதாகும். மேலே சொன்ன நஜஷ் எனும் வஞ்சகமான வியாபாரத்திற்கு அவர்கள் உடன்படுவதும் ஹராமான சம்பாத்தியமே. மேலும் வெளியே இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் அல்லது வியாபாரியிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றுவதும் ஹராமானதே. (சரக்கு வியாபாரியினுடையதாக இருந்தால் அவரை ஏமாற்றி) சரக்கின் விலையை குறைத்து விடுகின்றனர். ஆனால் இந்த தரகர்களுக்கு சொந்தமான சரக்காக இருந்தால் விலையை ஏற்றி விடுகின்றனர். வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் வஞ்சிக்கிறார்கள். ஏலத்தின் விலையை அதிகரிக்கின்றனர். இவ்வாறாக இத்தரகர்கள் மனிதர்களை ஏமாற்றி அவர்களுக்கு தீங்கிழைக்கின்றனர்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Wednesday, May 24, 2006

விற்பனைப் பொருளின் குறைகளை மறைத்தல்

'ஒரு உணவுக் குவியலின் பக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அதில் அவர்கள் தம் கையை நுழைத்தபோது அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. உணவு வியாபாரியே! என்ன இது? என்று வினவினார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் பட்டு விட்டது என்று பதிலளித்தார். மக்கள் பார்க்கும் விதமாக உணவுப் பொருளின் மேற்பகுதியில் அதைப் போட்டிருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

இறையச்சமில்லாத பெரும்பாலான வியாபாரிகள், பொருளின் குறையை மறைக்க பல விதத்திலும் முயலுகின்றனர். அதன் மீது டேப் ஒட்டி விடுகின்றனர். அல்லது அதைப் பெட்டியின் அடியில் போட்டு விடுகின்றனர். அல்லது ஏதாவது ரசாயனத்தைப் பயன்படுத்தி அழகுபடுத்தி விடுகின்றனர். வாகனத்தில் இஞ்சினின் ஆரம்ப சத்தத்தில் எழக்கூடிய குறையை மறைத்து விடுகின்றனர். குறைகளுடையப் பொருளை ஒருவன் வாங்கிச் சென்றால் அது சீக்கிரம் பழுதாகி விடுகிறது. இன்னும் சிலர் பொருள் காலாவதி ஆகக்கூடிய தேதியை மாற்றி விடுகின்றனர். அல்லது பொருளைப் பார்ப்பதற்கோ பரிசோதிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. வாகனங்களை அல்லது கருவிகளை விற்பவர்களில் பெரும்பாலோர் அவற்றின் குறைகளைத் தெளிவு படுத்துவதில்லை. இவை யாவும் விலக்கப்பட்டவையாகும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்குச் சகோதரனாவான். தன் சகோதரனுக்கு குறையுள்ள பொருளை விற்கின்ற எந்த முஸ்லிமுக்கும் அதைத் தெளிவு படுத்தாமலிருப்பது ஹலால் இல்லை' அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: இப்னுமாஜா.

சிலர் கருதுகின்றனர். வாகனங்களை ஏலம் விடும்போது நான் இரும்புகளை விற்கப் போகிறேன் என்று மக்களிடம் கூறி விட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று. (பழுதான வாகனங்களை வீற்ற குற்றம் வராது என்று) இப்படிப்பட்ட வியாபாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல அபிவிருத்தியை - பரக்கத்தை அழித்து விடக் கூடியதாகும்.

'விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்தை விட்டும்) பிரிந்து செல்லாத வரை வியாபாரத்தை ரத்து செய்ய உரிமை பெற்றவராவர். அவ்விருவரும் உண்மை கூறி (எதையும் மறைக்காது) தெளிவு படுத்தினால் அவர்களுடைய வியாபாரத்தில் அவர்களுக்கு அபிவிருத்தி அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி எதையேனும் மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் அபிவிருத்தி அழிக்கப்படும் (நபிமொழி) அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) நூல்: புகாரி.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Thursday, May 18, 2006

வட்டி வாங்குதல்

திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: "நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்" (2:278,279)

அல்லாஹ்விடம் இக்குற்றம் எந்த அளவுக்கு மோசமானது என்பதை விளக்குவதற்கு இவ்விரு வசனங்களே போதும்.

தனி நபர்கள் மற்றும் அரசாங்கங்களின் நிலையை சிந்தித்துப் பார்த்தால் வட்டியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திவால், நஷ்டம், சந்தையில் தேக்கநிலை, கடனை நிறைவேற்ற முடியாமை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவிகிதம் அதிகரிப்பு, பல நிறுவனங்கள், கம்பெனிகள் இழுத்து மூடப்படுதல், நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நாள் முழுதும் உழைத்துப் பெற்ற ஊதியத்தை வட்டிக் கடையில் வட்டியை அடைப்பதற்காக கொட்டுவது, ஒரு சிலரிடத்தில் மட்டும் பெரும் செல்வம் குவிவதால் மனித சமுதாயதில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் (பெருமளவில்) உருவாகுதல். இவையெல்லாம் வட்டியினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளாகும். வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்களை அல்லாஹ் எத்தகைய போர் அறிவிப்பைக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளானோ அத்தகைய போர் அறிவிப்பின் சில வடிவங்களாகக் கூட இவை இருக்கலாம்.

வட்டியில் ஈடுபடும் பிரதான நபர்கள், இடைத்தரகர்கள், உதவி செய்பவர்கள் ஆகிய அனைவருமே முஹம்மத் (ஸல்) அவர்களின் நாவால் சபிக்கப்பட்டவர்களாவர். ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'வட்டி வாங்குபவனையும், கொடுப்பவனையும், அதற்கு கணக்கு எழுதுபவனையும், சாட்சியாக இருப்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அக்குற்றத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கூறியுள்ளார்கள்' (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டிக் கணக்கு எழுதுவது, அதை சரி பார்ப்பது, ஒப்படைப்பது, கொடுத்து வைப்பது, பாதுகாப்பது ஆக எந்த விதத்திலும் வட்டிக்கு உதவுவதும் அதில் கூட்டு சேர்வதும் ஹராம் ஆகும். இப்பெரும் பாவம் எத்துணை மோசமானது என்பதை விளக்குவதில் நபி (ஸல்) அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'வட்டி எழுபத்து மூன்று வகைகளைக் கொண்டது. அதில் மிகக் குறைந்த பாவம் ஒருவன் தன் தாயிடம் விபச்சாரம் செய்வதற்குச் சமமாகும். வட்டியில் மிகக் கொடியது ஒரு முஸ்லிமின் மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (ஹாகிம்)

மேலும் கூறினார்கள்: 'ஒருவன் அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டியை உண்பது அறுபத்து மூன்று தடவை விபச்சாரம் செய்வதை விடக் கொடியது' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) நூல்: அஹ்மத்.

பொதுவாக வட்டி எல்லோருக்கிடையிலும் எல்லா நிலையிலும் ஹராமாகும். சிலர் எண்ணுவது போல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் மத்தியில் தான் ஹராமாகும் என்பதல்ல. எத்தனையோ செல்வந்தர்கள், பெரும் பெரும் வியாபாரிகள் வட்டியினால் அனைத்தையும் இழந்து ஆண்டியானதுண்டு. யதார்த்தம் இதற்கு சான்று பகர்கின்றது.

வட்டியினால் விளையும் குறைந்த பட்ச தீங்கு யாதெனில், அது செல்வத்திலுள்ள பரக்கத்தை - அபிவிருத்தியை அழித்து விடும். என்னதான் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சரியே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'வட்டிப் பொருள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதன் முடிவு நஷ்டமாகவே அமையும்' அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: ஹாகிம்.

அதுபோல வட்டி அது கூடுதலாக இருந்தால் தான் ஹராம் என்றல்ல, கூடுதலாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி அனைத்துமே ஹராமாகும். வட்டி உண்டவன் மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போல் மண்ணறையிலிருந்து எழுவான். இவ்வளவு மோசமான பாவமாக இது இருந்தும் இதற்கு தவ்பா - பாவமீட்சி உண்டு என அல்லாஹ் அறிவித்துள்ளான். அதன் முறையை அவன் விளக்கியுமுள்ளான்.

வட்டி வாங்குபவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் பாவமன்னிப்புக் கோரி (வட்டியைக் கை) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக் கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது" (2:279). இதுவே அசல் நீதியாகும்.

ஒரு முஃமினின் உள்ளம் இப்பெரும் பாவத்தை வெறுக்க வேண்டும். அது எத்துணை மோசமானது என்பதை உணர வேண்டும். எந்த அளவுக்கென்றால் நிர்பந்தமாக, பொருள் வீணாகி விடும் அல்லது திருடு போய்விடும் என்ற அச்சத்தில், வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் நிர்பந்தமாகத்தான் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்கிறார்கள். இது செத்த பிண்டத்தை அல்லது அதை விட மோசமானதை உண்பதைப் போன்றது என்றும் நாம் அவசியம் உணர வேண்டும். அத்துடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். மேலும் முடிந்தவரை இதற்கு மாற்றுப் பரிகாரம் காண முயல வேண்டும்.

வங்கிகளில் வட்டியை அவர்கள் கேட்டு வாங்கக் கூடாது. மாறாக அவர்களின் கணக்குகளில் வட்டி ஏற்றப்பட்டு விட்டால் ஏதேனும் ஆகுமான காரியத்தில் - தர்மமாக அல்லாமல் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்று - அதைச் செலவு செய்திட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மட்டுமல்ல எந்த விதத்திலும் அந்த வட்டித் தொகையைப் பயன்படுத்துவது அவர்களுக்கு ஆகுமானதல்ல. உண்பதற்கோ, பருகுவதற்கோ, உடுத்துவதற்கோ, வாகனத்திற்கோ, வீட்டிற்கோ அல்லது பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய கடமையான செலவுகளுக்கோ அல்லது ஜகாத் கொடுப்பதற்கோ, வரி செலுத்துவதற்கோ அல்லது தனக்கு நேரவிருந்த ஒரு அநீதியைத் தடுப்பதற்கோ எதற்கும் பயன்படுத்தக் கூடாது. அல்லாஹ்வின் தண்டனைக்கஞ்சி வட்டியிலிருந்து அவன் விலகிக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Wednesday, May 10, 2006

வம்ச உறவை மாற்றுதல்

ஒரு முஸ்லிம் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்து நான் அவருடைய மகன் என்று சொல்வதோ இதுபோல தன்னுடைய குடும்பத்தை விடுத்து வேறொரு குடும்பத்துடன் தன்னை இணைத்துச் சொல்வதோ மார்க்கத்தில் கூடாததாகும். சிலர் உலக இலாபங்களுக்காக இப்படிச் செய்கின்றனர். பொய்யான இந்த உறவை அரசு ஆவணங்களில் கூட பதிவு செய்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களுடைய தந்தை அவர்களை சிறு வயதிலேயே புறக்கணித்து, கவனிக்காமல் விட்டதற்காக தம் தந்தையின் மீதுள்ள வெறுப்பில் குரோதத்தில் இப்படிச் செய்யலாம். இவையனைத்தும் விலக்கப்பட்டவையாகும். இதனால் திருமணம், வாரிசுரிமை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் பெரும் குழப்பங்கள் ஏற்படும். ஆதாரபூர்வமான நபிமொழியில் வந்திருப்பதாவது:

'யார் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்துச் சொல்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), (புகாரி)

வம்ச உறவுகளை மாற்றக்கூடிய அல்லது அதில் பொய்யை இணைக்கக் கூடிய அனைத்து செயல்களும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவையாகும். சிலர் மனைவியுடன் தகறாறு ஏற்படும் போது அவளைத் தேவிடியாத்தனம் செய்பவள் என்று திட்டி விடுகின்றனர். தம்முடைய குழந்தையைக் கூட தம்முடையதல்ல என எந்த ஆதாரமும் இன்றிக் கூறி விடுகின்றனர். இன்னும் சில பெண்கள் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு தவறான உறவால் அடுத்தவனின் கருவைச் சுமந்து தனது கணவனின் வம்ச உறவில் சேர்த்து விடுகின்றனர். நபிமொழியில் இது குறித்து கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: 'லிஆன் (ஒருவரையொருவர் சபித்தல்) சம்பந்தமான வசனம் (24:6-9) இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒரு பெண் ஒரு குடும்பத்துக்குச் சம்பந்தமில்லாத (விபச்சாரத்தின் மூலம் உருவான கருவை அல்லது) குழந்தையை அக்குடும்பத்துடன் சேர்த்தால் அவளுக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது. மேலும் தனது சுவனத்தில் அல்லாஹ் அவளை சேர்க்க மாட்டான். (அதுபோல) ஒரு மனிதன் தன்னுடைய குழந்தை - அது அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் - அது எனக்கு பிறந்ததல்ல என மறுத்தால் அவனை விட்டும் அல்லாஹ் தூரமாகி விடுகிறான். மேலும் (மறுமையில்) மனிதர்களில் முன்னோர் பின்னோர் அனைவரின் முன்னிலையில் அவனைக் கேவலப்படுத்துவான்' (அபூதாவூத்).

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Tuesday, May 02, 2006

மானம் இழந்திருத்தல்

அதாவது மனைவியைக் கூட்டிக் கொடுத்தல். இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: 'மூன்று பேருக்கு அல்லாஹ் சுவனத்தை தடை செய்திருக்கிறான். அவர்கள், மதுவுக்கு அடிமையானவன், பெற்றோரை நிந்திப்பவன், தன் மனைவியிடம் பிறர் மானக்கேடாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் அளவு மானம் இழந்தவன் ஆகியோராகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அஹ்மத்)

நமது காலத்தில் இதற்கு உதாரணமாவது:

வீட்டிலுள்ள மனைவி அல்லது மகளின் செயல்களைக் கண்டு கொள்ளாதிருத்தல். அவர்கள் அந்நிய ஆடவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பரஸ்பரம் காதல் உரையாடலைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதுபோல தம் வீட்டுப் பெண் ஒரு அந்நிய ஆணுடன் தனித்திருப்பதை அனுமதிப்பது, மேலும் வீட்டு டிரைவர் போன்ற அந்நிய ஆடவருடன் தனியாக அவளைப் பயணம் செய்ய விடுவது, இன்னும் பர்தா இல்லாமல் அவள் வெளியேறுவதை அனுமதிப்பது, அதனால் வருவோர் போவோரின் கண்களுக்கு அவள் விருந்தாக நேரிடும். மேலும் தீமைகள் மற்றும் ஆபாசங்களைப் பரப்புகின்ற பத்திரிக்கைகளையும், சினிமா கேசட்டுகளையும் வீட்டில் நுழைய விடுவது போன்றவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.