Sunday, June 25, 2006

திருடுதல்

அல்லாஹ் கூறுகிறான்: "திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்" (5:38)

திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் இப்புவியின் மிகச்சிறந்த இடமான மஸ்ஜிதுல் ஹராமிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் கூட அல்லாஹ்வின் வரம்புகளுக்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை. சூரிய கிரகணத் தொழுகை பற்றிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'நரகம் என்னிடம் கொண்டு வரப்பட்டது. எப்போதெனில் அதன் ஜுவாலை என்மீது பட்டு விடுமோ என அஞ்சி நான் (தொழுகையில்) சற்று பின்னால் நகர்ந்ததை நீங்கள் பார்த்த சமயத்தில் (கொண்டு வரப்பட்டது).

அப்போது அங்குசத்தை வைத்திருக்கும் ஒருவன் நரகில் தன்னுடைய குடலை இழுத்துச் செல்வதைக் கண்டேன். தன்னுடைய அங்குசத்தைக் கொண்டு ஹாஜிகளிடம் திருடியவன் தான் அவன். ஹாஜிக்கு இது தெரிந்து விட்டால், உங்கள் சாமான் என்னுடைய அங்குசத்தில் தெரியாமல் கொழுவிக் கொண்டது என்று (சமாதானம்) கூறிவிடுவான். ஹாஜிக்கு இது தெரியாவிட்டால் சாமானை எடுத்துச் சென்று விடுவான். (முஸ்லிம்)

பொதுச் சொத்தைத் திருடுவது மோசமான திருட்டாகும். இதைச் செய்பவர்களில் சிலர், மற்றவர்கள் செய்வது போலவே நாங்களும் செய்கிறோம் என்று கூறுகின்றார்கள். இது எல்லா மக்களிடமிருந்து திருடுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் பொதுச் சொத்து என்பது மக்கள் எல்லோருக்கும் சொந்தமானது. இறையச்சம் இல்லாதவர்களுடைய இத்தகைய செயலை மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதைக் காட்டி நியாயப்படுத்த முடியாது.

இன்னும் சிலர் காஃபிர்களுடைய சொத்தை - அவர்கள் காஃபிர்களாக இருக்கிறார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு - திருடுகின்றனர். இதுவும் சரியல்ல. ஏனெனில் எந்தக் காஃபிர்கள் முஸ்லிம்களுடன் போர் தொடுக்கின்றார்களோ அவர்களுடைய சொத்துக்கள் தான் முஸ்லிம்களுக்கு ஆகுமானதே தவிர அனைத்து காஃபிர்களுடைய சொத்துக்கள், நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகுமானவை அல்ல.

திருடக்கூடிய வழிமுறைகளில் சில: அடுத்தவர்களுடைய சட்டைப் பையில் அவர்களுக்குத் தெரியாமல் கையைப் போட்டு (பிட்பாக்கெட் அடித்து) விடுகின்றனர். சிலர் அடுத்தவர்களின் வீட்டில் அவர்களை சந்திக்கும் நோக்கில் நுழைந்து திருடி விடுகின்றனர். இன்னும் சிலர் விருந்தாளிகளுடைய பைகளில் திருடி விடுகின்றனர். வேறுசிலர் வியாபாரஸ்தலங்களில் நுழைந்து அங்குள்ள பொருட்களை தம்முடைய சட்டைப்பைகளில் அல்லது ஆடைகளில் மறைத்து விடுகின்றனர். சில பெண்கள் கூட இவ்வாறு செய்கின்றனர்.

இன்னும் சிலர் குறைவான அல்லது அற்பமான பொருட்களைத் திருடுவதை இலேசாகக் கருதுகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (ஒரு) முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.

ஒருவன் ஒரு பொருளைத் திருடி விட்டால் அல்லாஹ்விடம் அவன் பாவமன்னிப்புக் கோருவதும் அப்பொருளை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பதும் அவசியமாகும். பகிரங்கமாக அவரிடம் கொடுத்தாலும் சரி அல்லது தனிப்பட்ட முறையில் இரகசியமாக அவரை சந்தித்துக் கொடுத்தாலும் சரி. ஆனால் உரியவரிடமோ அல்லது அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகளிடமோ அப்பொருளை ஒப்படைக்க முடியவில்லையெனில், அவரைத் தேடுவதில் மிகுந்த முயற்சி எடுத்தும் இயலவில்லையெனில் உரியவர் பேரில் அப்பொருளை தர்மம் செய்து விட வேண்டும். அதற்கான கூலி உரியவருக்குக் கிடைக்க எண்ணிக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Monday, June 19, 2006

சூதாட்டம்

அல்லாஹ் கூறுகிறான்: "ஈமான் கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்" (5:90)

அறியாமைக் காலத்து மக்களிடம் சூதாட்டம் பல விதங்களில் இருந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த பிரபலமான ஒரு விதம் வருமாறு: ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் சம அளவில் பங்கு போட்டு கொள்வர். பிறகு அம்புகள் மூலம் சீட்டுக் குலுக்கிப் போட்டு ஏழு பேர்கள் மட்டும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை எடுத்துக் கொள்வர். எஞ்சியுள்ள மூன்று பேர்களுக்கு ஒன்றும் கிடைக்காது.

நமது காலத்தில் சூதாட்டம் பல விதத்தில் நடக்கின்றது. அவற்றுல் சில:

1. லாட்டரி: இதில் பல வகைகள் உள்ளன. சாதாரணமாக நடைமுறையில் உள்ளது இதுதான். அதாவது பணம் கொடுத்துப் பரிசு சீட்டுகளை வாங்கிக் கொள்வார்கள். குறிப்பிட்ட தேதியில் அந்தப் பரிசுச் சீட்டுகளின் பேரில் குலுக்கல்கள் நடைபெறும். முடிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என (ஆயிரங்கள் முதல் கோடிகள் வரை) பரிசுத் தொகை கிடைக்கும். இதற்கு அவர்கள் என்ன பெயரை வைத்துக் கொண்டாலும் இது ஹராம் தான்.

2. ஏதேனும் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குவது. அதனுள் என்ன இருக்கிறதென்றே தெரியாது. அல்லது ஒரு பொருளை வாங்கும் போது அதற்கு ஒரு நம்பர் அல்லது ஒரு சீட்டுக் கொடுக்கப்படும். பிறகு அதன் பேரில் குலுக்கல் நடைபெறும் அதிர்ஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

3. நமது காலத்திலுள்ள சூதாட்ட வகைகளில் வணிக இன்சூரன்சும் ஒன்றாகும். ஆயுள் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ், சரக்குகளுக்கு இன்சூரன்ஸ், நெருப்பினால் ஏற்படக்கூடிய இழப்புகளின் ஈட்டுக்கு இன்சூரன்ஸ், பொது இன்சூரன்ஸ், பிறரின் தீங்கிலிருந்து பாதுகாக்க இன்சூரன்ஸ் இப்படி பலவகையான இன்சூரன்ஸ்கள் உள்ளன. எந்த அளவுக்கெனில் சில பாடகர்கள் தங்களின் குரலுக்கும், சில விளையாட்டு வீரர்கள், நடிகைகள் தங்களின் சில உறுப்புகளுக்கும் இன்சூரன்ஸ் செய்துக் கொள்கின்றனர்.

மேற்கூறப்பட்ட முறைகளைத் தவிர இன்னும் பல முறைகளும் உள்ளன. அவையனைத்தும் சூதாட்டத்தில் அடங்கும். இன்று சூதாட்டத்திற்கென தனிப்பட்ட கிளப்கள், சங்கங்கள் இருக்கின்றன. அங்கு இப்பெரும் பாவத்தைச் செய்வதற்குத் தனிப்பட்ட பச்சை நிற மேசைகள் உள்ளன. அதுப்பொல கிரிக்கெட், கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பந்தயம் கட்டுவதும் ஒருவகை சூதாட்டமே! அதுபோல சில விளையாட்டு அரங்கங்களிலும் பொழுது போக்கு மையங்களிலும் சூதாட்டத்தின் அடிப்படையிலான பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. போட்டிகள் மூன்று வகைப்படும்:

1. மார்க்க அடிப்படையிலான போட்டிகள். இத்தகைய போட்டிகள் பரிசுகளுடனோ அல்லது பரிசுகள் இல்லாமலோ நடத்தப்படுவது ஆகுமானதாகும். உதாரணமாக ஒட்டகப் பந்தயங்கள், குதிரைப் பந்தயங்கள், துப்பாக்கி சுடும் போட்டிகள், குறிபார்(த்து இலக்கைத் தா)க்கும் போட்டிகள், போன்றவையாகும். (இத்தகைய போட்டிகள் அறப்போருக்கு உதவும்) இத்தகைய போட்டிகளில் - அரிஞர்களின் சரியான சொல்லின் பிரகாரம் - திருக் குர்ஆனை மனனம் செய்தல் போன்ற கல்விப் போட்டிகளும் அடங்கும்.

2. தன் அளவில் ஆகுமான போட்டிகள்: எடுத்துக்காட்டாக: கால்பந்து போட்டிகள், ஓட்டப்பந்தயங்கள். ஆனால் தொழுகையை வீணாக்குதல், மறைக்க வேண்டிய பகுதியை மறைக்காத வகையில் அறைகுறை ஆடை அணிதல் போன்ற ஹராமான காரியங்களை விட்டும் இவை நீங்கியிருக்க வேண்டும். பந்தயம் கட்டாமல் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டால் அவை கூடும்.

3. தன் அளவில் ஹராமான அல்லது ஹராமின் பக்கம் சேர்க்கக்கூடிய போட்டிகள்: உதாரணம்: அழகிப் போட்டிகள், முகத்தைக் காயப்படுத்தக் கூடிய குத்து சண்டைப் போட்டிகள், அதுபோல கொம்புள்ள கால்நடைகளை மோத விடுதல், சேவல்களை மோத விடுதல் போன்ற போட்டிகள் அனைத்தும் விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Saturday, June 10, 2006

ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்

அல்லாஹ் கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்" (62:9)

சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி இத்தகைய வியாபாரம் தவறானதாகும். ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் பணியாளர்களை ஜும்ஆ தொழுகையின் நேரத்தில் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். வெளிப்படையில் இத்தகையோரின் இலாபம் அதிகரித்தாலும் உண்மையில் அவர்களுக்கு நஷ்டம் தான் அதிகரிக்கின்றது. ஆனால் பணிபுரியக் கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியின் தேட்டத்திற்கேற்ப செயல்படுவது அவசியமாகும். ஏனெனில், 'அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்குக் கட்டுப்படக் கூடாது' என்பது நபிமொழி. (அஹ்மத்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.