Thursday, May 24, 2007

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: "எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்" (22:30,31)

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். புகாரி (5976), முஸ்லிம்.

பொய் சாட்சி சொல்வதைப் பற்றிய எச்சரிக்கை இங்கு திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் மக்கள் அதை சாதாரணமாக எண்ணுவதும், அதன்பால் தூண்டக்கூடிய பகைமை, பொறாமை போன்ற காரணங்கள் அதிகமாக இருப்பதாலும், அதனால் பெரும் தீமைகள் விளைவதாலும் தான். பொய் சாட்சியால் எத்தனை உரிமைகள் பாழாகியுள்ளன! எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்! அதுமட்டுமா பொய் சாட்சியினால் எத்தனையோ பேர் தங்களுக்கு உரிமை இல்லாதவற்றை அடைந்துள்ளனர்! எத்தனையோ பேருக்கு போலியான குடும்ப உறவு ஏற்பட்டுள்ளது.

பொய் சாட்சி சொல்வதை சாதாரணமாகக் கருதுவதில் இதுவும் அடங்கும். சிலர் நீதிமன்றங்களில் தான் சந்திக்கும் (முன் பின் தெரியாத) ஒருவரிடம் எனக்கு நீ சாட்சி சொல், உனக்கு நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறுகின்றனர். பிறகு உண்மை நிலவரம் என்ன, சூழ்நிலை என்ன என்று தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களிலும் கூட எதுவும் தெரியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாட்சி கூறிக் கொள்கின்றனர்.

உதாரணமாக இவந்தான் இந்த நிலத்துக்கு அல்லது இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன், அல்லது இவன் குற்றமற்றவன் என்று சாட்சி சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் அவனை (முதல் முறையாக) நீதிமன்ற வாசலிலோ அல்லது தெருவிலோ தான் சந்தித்திருப்பார்கள். இது பொய்யான, போலியான சாட்சியாகும் சாட்சி கூறுவதென்பது "நாங்கள் அறிந்ததை வைத்தே சாட்சி சொல்கிறோம்" (12:81) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது போல அமைய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன.


இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் அவர்களின் வலிமா-விருந்துகளிலும் கலந்து கொள்ளும்போது அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவையனைத்தும் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட காரியங்களாகும். இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவது பற்றி நபி (ஸல்) அவர்கள் மூலம் கடுமையான எச்சரிக்கையும் வந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:

'நிச்சயமாக தங்கம்,வெள்ளிப் பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றினுள் நரக நெருப்பையே நிரப்புகிறான்' அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: முஸ்லிம்.

இந்தச் சட்டம் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா வகைப் பண்ட - பாத்திரங்களையும் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக தட்டு, கரண்டி வகைகள், கத்திகள், விருந்தினருக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இனிப்புப் பணடங்களை வைக்கப் பயன்படுத்தப்படுகின்ற டப்பாக்கள் போன்றவை.

இன்னும் சிலரோ நாங்கள் இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் கண்ணாடிப் பெட்டிகளில் அழகுக்காக மட்டுமே வைத்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதுவும் கூடாது. ஏனெனில் இது உபயோகப்படுத்துவதற்கான வழியைத் திறந்து விடும் என்பதற்காக.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்" (5:90)மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, அல்லாஹ் அது ஹராம் என்று கூறவில்லையே! அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளான் என்று கூறுபவர்களூக்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கவில்லை.மது அருந்துபவனுக்கு நபிமொழியிலும் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. 'போதைப் பொருளை அருந்துபவனுக்கு 'தீனதுல் கபால்' எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரே! 'தீனதுல் கபால்' என்றால் என்ன?' எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், 'நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.'மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.'என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்' (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக 'உற்சாகமூட்டும் பானங்கள்' எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை" (2:9).

இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: 'போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்.புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் - அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் - ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.மதுவுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் எத்தனை வகைகள் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எல்லாம் மது தான். எல்லாவற்றுக்கும் (ஹராம் எனும்) ஒரே சட்டம் தான்.இறுதியாக மது அருந்துபவர்களுக்கு இதோ நபி (ஸல்) அவர்கள் செய்த ஓர் அறிவுரை.

'எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு 'ரத்கதுல் கபால்' என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! 'ரத்கதுல் கபால்' என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நரகவாசிகளின் சீழ்' என பதிலளித்தார்கள்'
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலையே இதுவானால் அதைவிடக் கடுமையான போதையுடைய பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலை, அதற்கு அடிமையானவர்களின் நிலை எதுவோ?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.



ஹராமானவற்றை உண்ணுதல்

இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ அல்லது பொது சொத்துகளில் கை வைத்தல், பிறரிடம் வற்புறுத்திக் கேட்டு பெறுதல், தேவையின்றி யாசகம் கேட்டல் போன்ற ஹராமான வழியின் மூலமாகவோ கிடைத்தாலும் சரியே! பின்னர் அவன் அதிலிருந்தே உண்பான், உடுத்துவான், வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான், அதை வாடகைக்கு அமர்த்துவான், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவான், ஹராமைக் கொண்டே தன் வயிற்றை நிரப்பிக் கொள்வான் . நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஹராமிலே வளர்ந்த ஒவ்வொரு உடலுக்கும் நரகமே பொருத்தமாகும்' (தப்ரானி)மறுமையில் அவனுடைய செல்வம் பற்றி - அதை எங்கிருந்து சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவழித்தாய்? என்று அவனிடம் விசாரணை செய்யப்படும். அங்குதான் அவனுக்கு நஷ்டமும், நாசமும் காத்திருக்கிறது. எனவே யாரிடம் ஹராமான பொருள் எஞ்சியிருக்கிறதோ அவர் விரைந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளட்டும். அது ஒரு மனிதனுக்குரிய உரிமையாக இருந்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அதை அவரிடம் விரைந்து திருப்பிக் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கோரட்டும். அந்த மறுமை நாள் வந்து விட்டாலோ விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது

மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது. அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: "அடைக்கலப் பொருள்களை அவற்றிற்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" (4:58)

சமுதாயத்தில் பரவலாக காணப்படும் தீமைகளில் ஒன்று தான் கடன் வாங்குவதைச் சாதாரணமாகக் கருதும் போக்கும். சிலர் மிக அவசியத் தேவைக்காகக் கடன் வாங்குவதில்லை. அவர்கள் கடன் வாங்குவதெல்லாம் இருக்கும் வளத்தை அதிகப்படுத்தும் ஆர்வத்தில்தான். மேலும் வாகனம், வீட்டின் அலங்காரப் பொருள் போன்ற அழியும் உலக சாதனங்களை - குப்பைகளைப் புதிது புதிதாகப் பயன்படுத்துவதில் பிறருடன் போட்டி போடும் எண்ணத்தில் தான் கடன் வாங்குகின்றனர். இத்தகையவர்கள் பெரும்பாலும் தவணை முறையில் கொடுக்கல், வாங்கல் செய்யும் வியாபாரங்களில் (Instalment) ஈடுபட்டு விடுகின்றனர். அவை பெரும்பாலும் ஹராமாகவோ அல்லது ஹராமா ஹலாலா என சந்தேகம் கொள்ளும் வியாபாரமாகவோ தான் இருக்கின்றன.

கடன் வாங்குவதை சர்வசாதாரணமாக நினைப்பது திருப்பிக் கொடுப்பதைக் கால தாமதம் செய்வதன் பால், அல்லது அடுத்தவர்களுடைய பணத்தை பாழாக்கி அதை அழிப்பதன் பால் இட்டுச் செல்லும். இச்செயலின் முடிவு பற்றி எச்சரித்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: 'யார் திருப்பிக் கொடுத்திட வேண்டுமென்ற நோக்கோடு மக்களின் பொருள்களை (கடனாக) வாங்குகிறாரோ அதனை அல்லாஹ் திருப்பிக் கொடுத்து விடுகிறான். (அதாவது அவர் திருப்பிக் கொடுக்க அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்) அப்பொருளை நாசப்படுத்திடும் நோக்கில் வாங்கினால் அதனை அல்லாஹ் நாசமாக்கி விடுவான்'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).

ஆம்! கடன் விஷயத்தில் மக்கள் ரொம்பவும் அலட்சியமாக இருக்கின்றனர். அதை இலேசாகவும் கருதுகின்றனர். ஆனால் அதுவோ அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. மட்டுமின்றி ஒரு உயிர்தியாகிக்கு - மிகப்பெரும் பாக்கியம், அளப்பரிய கூலி, மிக உயர்ந்த அந்தஸ்து இவையெல்லாம் இருந்தும் கூட கடனை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து அவர் தப்பிக்க முடியாது.

இதற்கு ஆதாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற்யுள்ளார்கள்; 'சுப்ஹானல்லாஹ்! கடன் விஷயத்தில் எவ்வளவு கடுமையான எச்சரிக்கையை அல்லாஹ் இறக்கி வைத்திருக்கிறான் தெரியுமா? என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ர்ப்பிக்கப்படுகிறார் எனில் அவர் மீது கடன் பாக்கி இருந்தால் அக்கடனை நிறைவேற்றாத வரை அவர் சொர்க்கம் செல்ல மாட்டார்'
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஜஹ்ஸ் (ரலி) நூல்: நஸயீ.

இத்தனைக்குப் பிறகும் கடன் விஷயத்தில் அலட்சியமாக இருப்பவர்கள் திருந்துவார்களா?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

இரண்டு பேர் இரகசியம் பேசுதல்

அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும்.

அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

"இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்" (24:27)

அனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 'அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் காரணமாகத்தான்' என்பது நபிமொழி. (புகாரி)

இன்று வீடுகள் கட்டிடங்கள் நெருக்கமாகவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் இருக்கின்றன. ஜன்னல்களும் வாசல்களும் நேருக்கு நேர் உள்ளன. இதனால் அக்கம் அக்கத்தில் வசிப்போரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பரஸ்பரம் பார்வையில் படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளன. பெரும்பாலோர் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை. சில பொழுது உயரமான கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் சிலர் தம் ஜன்னல் வழியாகவும் மாடி வழியாகவும் தமக்குக் கீழே இருக்கின்ற அண்டை வீடுகளை எட்டிப் பார்க்கின்றனர். இது நம்பிக்கைத் துரோகமாகும். மட்டுமல்ல இது அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடியதாகவும் தகாத காரியத்தின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால் எத்தனையோ துன்பங்களும் குழப்பங்களுமே ஏற்பட்டுள்ளன. இச்செயல் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்குச் சான்றாக பிறருடைய வீட்டில் எட்டிப் பார்ப்பவருடைய கண்ணுக்கான நஷ்டயீட்டை ஷரீஅத் தளர்த்தியிருப்பதே போதுமானதாகும்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஒருவர் பிறருடைய வீட்டில் அனுமதியின்றி எட்டிப் பார்த்தால் அவருடைய கண்ணைப் பறிப்பது அவ்வீட்டாருக்கு ஆகுமானதாகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

அஹ்மதுடைய ஒரு அறிவிப்பில் 'அவருடைய கண்ணைப் பறித்து விடுங்கள். அதற்கு நஷ்டயீடோ, பழிக்குப் பழியோ கிடையாது' என்றும் உள்ளது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கோள் சொல்லுதல்

மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்:

"அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்" (68:10,11) 'கோள்ச் சொல்லித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் 'அது பெரிய விஷயம் தான்' என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி)

கோள் சொல்வதில் மிக மோசமானது கணவனைப் பற்றி மனைவியிடத்திலும், மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் குறை கூறித் திரிவதாகும். அவ்விருவருக்கிடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதற்கான முயற்சியாகும் இது. அதுபோல பணியாளர்கள் தம் சக பணியாளர்களைப் பற்றி - அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதற்காக - மேனேஜரிடம் அல்லது ஏனைய பொறுப்பாளர்களிடம் கோள் சொல்கின்றனர். இதுவும் மோசமானதாகும். இவையனைத்துமே விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

புறம் பேசுதல்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: "உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுகின்றீர்கள்" (49:12)

புறம் என்பதின் அர்த்தத்தை நபி (ஸல்) அவர்கள் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்: 'புறம் பேசுதல் என்றால் என்ன? என்று நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள் எனக் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுதல் என்பது) நீ உம் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய். நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறி விட்டாய்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

எனவே புறமென்பது ஒரு முஸ்லிமைப் பற்றி அவனிடம் உள்ள- அவன் விரும்பாத தன்மைகளில் ஒன்றைக் கூறுவதாகும். அவனுடைய உடல், மார்க்கம், உலக விவகாரம், குணநலன்கள், உடலமைப்பு என எது தொடர்பானதாக இருந்தாலும் சரியே! இப்படிப் புறம் பேசுவதற்குப் பல முறைகள் உள்ளன. அவனுடைய குறைகளை அல்லது அவனுடைய நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கேலியாக எடுத்துச் சொல்வதும் அவற்றுள் ஒன்றாகும்.

புறம் பேசுதல் என்பது அல்லாஹ்விடத்தில் மிக மோசமான விஷயமாக இருந்தும் மக்கள் இது விஷயத்தில் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார்கள். பின்வரும் நபிமொழி இதை உணர்த்துகிறது. 'வட்டியில் எழுபத்திரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)

ஆகவே சபையிலிருப்பவர் அங்கு நடக்கின்ற தீமையையும் தன் சகோதரனைப் பற்றி புறம் பேசப்படுவதையும் தடுப்பது கடமையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் ஆர்வமூட்டியுள்ளார்கள்: 'யார் தன்னுடைய சகோதரனின் கண்ணியம் மற்றும் மான மரியாதைக்கு களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவருடைய முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்' (நபிமொழி) அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: திர்மிதி.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.