Saturday, February 24, 2007

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்" (5:90)

மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, அல்லாஹ் அது ஹராம் என்று கூறவில்லையே! அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளான் என்று கூறுபவர்களூக்கு எந்த ஆதாரமும் எஞ்சியிருக்கவில்லை.

மது அருந்துபவனுக்கு நபிமொழியிலும் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. 'போதைப் பொருளை அருந்துபவனுக்கு 'தீனதுல் கபால்' எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரே! 'தீனதுல் கபால்' என்றால் என்ன?' எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், 'நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

'மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.

நம்முடைய இக்காலத்தில் மதுவும், போதைப் பொருள்களும் பல்வேறு வகைகளில் காணக் கிடைக்கின்றன. அரபியிலும் வேறு மொழிகளிலும் அவற்றுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுவை-கள் என்றும், சாராயம் என்றும், விஸ்கி, பீர், பிராந்தி, ஒயின், ரம், ஆல்கஹால், வோட்கா (Vodka), அரக் (Arrack), ஷாம்பேன் (Chanpagne) என்றெல்லாம் கூறிக் கொள்கின்றனர்.

'என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்' (நபிமொழி. அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), நூல்: இப்னுமாஜா) என்று யாரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அத்தகையவர்கள் இச்சமுதாயத்தில் தோன்றி விட்டனர். இவர்கள் மது என்ற பெயரை மூடி மறைத்து விட்டு அதற்குப் பகரமாக 'உற்சாகமூட்டும் பானங்கள்' எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் அல்லாஹ்வையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை. அவர்கள் அதை உணர்வதில்லை" (2:9).

இவ்விஷயத்துக்கு முடிவு கட்டக்கூடிய, விளையாட்டுத்தனமான இத்தகைய குழப்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கக்கூடிய மாபெரும் சட்டத்தை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. அது பின்வரும் நபிமொழியில் இவ்வாறு உள்ளது: 'போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்.

புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் - அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் - ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்.

மதுவுக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் எத்தனை வகைகள் இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான். எல்லாம் மது தான். எல்லாவற்றுக்கும் (ஹராம் எனும்) ஒரே சட்டம் தான்.

இறுதியாக மது அருந்துபவர்களுக்கு இதோ நபி (ஸல்) அவர்கள் செய்த ஓர் அறிவுரை.

'எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு 'ரத்கதுல் கபால்' என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! 'ரத்கதுல் கபால்' என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நரகவாசிகளின் சீழ்' என பதிலளித்தார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா.

மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலையே இதுவானால் அதைவிடக் கடுமையான போதையுடைய பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் நிலை, அதற்கு அடிமையானவர்களின் நிலை எதுவோ?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஹராமானவற்றை உண்ணுதல்

இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ அல்லது பொது சொத்துகளில் கை வைத்தல், பிறரிடம் வற்புறுத்திக் கேட்டு பெறுதல், தேவையின்றி யாசகம் கேட்டல் போன்ற ஹராமான வழியின் மூலமாகவோ கிடைத்தாலும் சரியே! பின்னர் அவன் அதிலிருந்தே உண்பான், உடுத்துவான், வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான், அதை வாடகைக்கு அமர்த்துவான், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவான், ஹராமைக் கொண்டே தன் வயிற்றை நிரப்பிக் கொள்வான் . நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஹராமிலே வளர்ந்த ஒவ்வொரு உடலுக்கும் நரகமே பொருத்தமாகும்' (தப்ரானி)

மறுமையில் அவனுடைய செல்வம் பற்றி - அதை எங்கிருந்து சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவழித்தாய்? என்று அவனிடம் விசாரணை செய்யப்படும். அங்குதான் அவனுக்கு நஷ்டமும், நாசமும் காத்திருக்கிறது. எனவே யாரிடம் ஹராமான பொருள் எஞ்சியிருக்கிறதோ அவர் விரைந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளட்டும். அது ஒரு மனிதனுக்குரிய உரிமையாக இருந்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அதை அவரிடம் விரைந்து திருப்பிக் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கோரட்டும். அந்த மறுமை நாள் வந்து விட்டாலோ விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

கடன்

திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது

மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது.

அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: "அடைக்கலப் பொருள்களை அவற்றிற்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" (4:58)

சமுதாயத்தில் பரவலாக காணப்படும் தீமைகளில் ஒன்று தான் கடன் வாங்குவதைச் சாதாரணமாகக் கருதும் போக்கும். சிலர் மிக அவசியத் தேவைக்காகக் கடன் வாங்குவதில்லை. அவர்கள் கடன் வாங்குவதெல்லாம் இருக்கும் வளத்தை அதிகப்படுத்தும் ஆர்வத்தில்தான். மேலும் வாகனம், வீட்டின் அலங்காரப் பொருள் போன்ற அழியும் உலக சாதனங்களை - குப்பைகளைப் புதிது புதிதாகப் பயன்படுத்துவதில் பிறருடன் போட்டி போடும் எண்ணத்தில் தான் கடன் வாங்குகின்றனர். இத்தகையவர்கள் பெரும்பாலும் தவணை முறையில் கொடுக்கல், வாங்கல் செய்யும் வியாபாரங்களில் (Instalment) ஈடுபட்டு விடுகின்றனர். அவை பெரும்பாலும் ஹராமாகவோ அல்லது ஹராமா ஹலாலா என சந்தேகம் கொள்ளும் வியாபாரமாகவோ தான் இருக்கின்றன.

கடன் வாங்குவதை சர்வசாதாரணமாக நினைப்பது திருப்பிக் கொடுப்பதைக் கால தாமதம் செய்வதன் பால், அல்லது அடுத்தவர்களுடைய பணத்தை பாழாக்கி அதை அழிப்பதன் பால் இட்டுச் செல்லும். இச்செயலின் முடிவு பற்றி எச்சரித்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: 'யார் திருப்பிக் கொடுத்திட வேண்டுமென்ற நோக்கோடு மக்களின் பொருள்களை (கடனாக) வாங்குகிறாரோ அதனை அல்லாஹ் திருப்பிக் கொடுத்து விடுகிறான். (அதாவது அவர் திருப்பிக் கொடுக்க அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்) அப்பொருளை நாசப்படுத்திடும் நோக்கில் வாங்கினால் அதனை அல்லாஹ் நாசமாக்கி விடுவான்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).

ஆம்! கடன் விஷயத்தில் மக்கள் ரொம்பவும் அலட்சியமாக இருக்கின்றனர். அதை இலேசாகவும் கருதுகின்றனர். ஆனால் அதுவோ அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. மட்டுமின்றி ஒரு உயிர்தியாகிக்கு - மிகப்பெரும் பாக்கியம், அளப்பரிய கூலி, மிக உயர்ந்த அந்தஸ்து இவையெல்லாம் இருந்தும் கூட கடனை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து அவர் தப்பிக்க முடியாது.

இதற்கு ஆதாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற்யுள்ளார்கள்; 'சுப்ஹானல்லாஹ்! கடன் விஷயத்தில் எவ்வளவு கடுமையான எச்சரிக்கையை அல்லாஹ் இறக்கி வைத்திருக்கிறான் தெரியுமா? என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ர்ப்பிக்கப்படுகிறார் எனில் அவர் மீது கடன் பாக்கி இருந்தால் அக்கடனை நிறைவேற்றாத வரை அவர் சொர்க்கம் செல்ல மாட்டார்'அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஜஹ்ஸ் (ரலி) நூல்: நஸயீ.

இத்தனைக்குப் பிறகும் கடன் விஷயத்தில் அலட்சியமாக இருப்பவர்கள் திருந்துவார்களா?

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.