Monday, August 04, 2008

முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்

'முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

முகத்தில் அடித்தல்: சில தந்தையர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளைத் தண்டிக்கும் போது கையால் அல்லது வேறு பொருளால் அவர்களின் முகத்தில் அறைந்து விடுகின்றனர். அதுபோலவே சிலர் தமது வேலைக்காரர்களை அடித்து விடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் எந்த முகத்தின் மூலம் அல்லாஹ் மனிதனைக் கண்ணியப்படுத்தி இருக்கின்றானோ அந்த முகத்தை இழிவுபடுத்துவதுமாகும். முகத்தில் அடிப்பது சிலவேளை முகத்திலுள்ள சில முக்கியப் புலன்களை இழக்கச் செய்துவிடும். அதனால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும். சிலபோது பழிக்குப் பழிவாங்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.

கால்நடைகளுக்கு முகத்தில் சூடு போடுதல்: பிராணியின் சொந்தக்காரன் தனது பிராணியை இனம் கண்டு கொள்வதற்காகவும் அல்லது அது காணாமல் போய்விட்டால் அவனிடம் திருப்பி ஒப்படைப்பதற்காகவும் அடையாளத்திற்காக கால்நடைகளின் முகத்தில் சூடு போடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் இது பிராணியின் முகத்தை அலங்கோலப்படுத்துவதும் பிராணியை வதைப்பதுமாகும். இவ்வாறு செய்வது எங்கள் குலத்தின் வழக்கமும், எங்கள் குலத்தின் விஷேச அம்சமுமாகும் என சிலர் வாதிட்டாலும் சரியே! ஆயினும் முகமல்லாத இடங்களில் அடையாளத்திற்காக சூடு போடுவது கூடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.