Saturday, January 28, 2006

சத்தியம் செய்தல்

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்

அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் தான் நாடியதைக் கொண்டு சத்தியம் செய்கிறான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது கூடாது. என்றாலும் பெரும்பாலான மக்களுடைய பேச்சுகளில் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. எந்த மகத்துவம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் பொருந்தாதோ அத்தகைய மகத்துவம் சத்தியத்தில் உள்ளது.

இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: 'அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய தந்தையர் மீது சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடை செய்திருக்கிறான். (உங்களில்) யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையென்றால் மௌனமாக இருக்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புகாரி). இப்னு உமர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'அல்லாஹ் அல்லாதவற்றின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அஹ்மத்), 'அடைக்கலப் பொருளின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: புரைதா (ரலி). நூல்: அபுதாவூத்.

எனவே கஃபா, அடைக்கலப் பொருள், உதவி, கண்ணியம், இன்னாருடைய பரகத், இன்னாருடைய வாழ்வு, நபியின் அந்தஸ்து, அவ்லியாக்களுடைய அந்தஸ்து, தாய், தந்தை, குழந்தைகள் இன்னும் இது போன்றவற்றின் மீது சத்தியம் செய்வது ஹராமாகும். யாரேனும் இவ்வாறு செய்து விட்டால் அதற்கான பரிகாரம் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது போல 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதாகும். 'உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக (நமது நாடுகளில் முஹ்யுத்தீன் ஆண்டவர், ஷாஹுல் ஹமீது ஆண்டவர் மீது சத்தியமாக என்று கூறுவது போல) என்று கூறினால் அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).

இதே அடிப்படையில் இன்னும் பல ஹராமான, ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன. சில முஸ்லிம்கள் அவற்றைக் கூறி வருகின்றனர். உதாரணமாக அல்லாஹ்வைக் கொண்டும் உன்னைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், அல்லாஹ்வின் மீது உன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன், இது அல்லாஹ்வினாலும் உன்னாலும் தான் கிடைத்தது, அல்லாஹ்வையும் உன்னையும் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார், எனக்காக வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீயும் இருக்கிறாய், அல்லாஹ்வும் இன்னாரும் இல்லையென்றால் இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, காலத்தின் கோலமே! - இன்னும் இதுபோன்ற காலத்தைத் திட்டும்படியான வாசகங்கள். உதாரணமாக கெட்டகாலம், நேரம் கெட்ட நேரம், காலத்தின் சூழ்ச்சி போன்ற வாசகங்கள். ஏனெனில் காலத்தைத் திட்டுவது அதனை படைத்த இறைவனைத் திட்டுவது போலாகும் - இயற்கையின் நாட்டம், படைப்பினங்களின் பெயருடன் 'அப்து' என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறப்பட்ட பெயர்கள் - உதாரணமாக அப்துல் மஸீஹ், அப்துன் நபி, அப்துர் ரஸூல், அப்துல் ஹுஸைன். (அப்து என்பதன் பொருள் அடிமை ஆகும். அப்து என்பதை அல்லாஹ்வின் பெயர்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.)

இதுபோல தவ்ஹீதுக்கு எதிரான நவீன சில வாசகங்களும், சொல் வழக்குகளும் உள்ளன. இஸ்லாமிய சோஸலிஸம், இஸ்லாமிய ஜனநாயகம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மதம் இறைவனுக்குரியது நாடு மக்களுக்கு உரியது, மொழி, இனவாதம், புரட்சி வாதம்.

மலிகுல் முலூக் (அரசர்களுக்கெல்லாம் அரசர்), காழியுல் குழாத் (நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி) என்ற வார்த்தைகளையும் இந்த அர்த்தத்திலுள்ள வார்த்தைகளையும் ஒரு மனிதருக்குச் சொல்வதும், அதுபோல ஸய்யித் (தலைவர், எஜமான்) என்ற வார்த்தையையும் அதே அர்த்தத்திலுள்ள வேறு வார்த்தைகளையும் - அது எந்த மொழியிலிருந்தாலும் சரி நயவஞ்சகனுக்கும் காஃபிருக்கும் சொல்வதும், இப்படியாகி விட்டதே! அப்படியாகி விட்டதே! இப்படி இருந்திருக்கக் கூடாதா! அப்படி இருந்திருக்கக் கூடாதா! இவ்வாறு இருந்திருந்தால், அப்படி இருந்திருந்தால், இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்பன போன்ற அதிருப்தி, வருத்தம், கை சேதம் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய - ஷைத்தானிய செயலுக்கு வழி திறந்து விடக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், இறைவா! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! என்று கூறுவதும் விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.