Friday, March 03, 2006

கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல்

ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும்.

'ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம் கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளை சபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி)

தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம் அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்.

எனவே கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து, விரைந்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது மனைவியின் கடமையாகும். 'ஒரு மனிதன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் (பயணம் புறப்படுவதற்காக) ஒட்டகத்தின் சேணத்தின் மேல் அமர்ந்திருந்தாலும் செல்லட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' அறிவிப்பவர்: ஸைத் பின் அர்க்கம். (பஸ்ஸார்)

அதே நேரத்தில் தன்னுடைய மனைவி நோயாளியாகவோ, கர்ப்பிணியாகவோ அல்லது வேறு ஏதேனும் துன்பத்தில் இருந்தால் அது போன்ற சமயங்களில் அவளை இல்லறத்திற்கு நிர்பந்திக்காதிருப்பது கணவன் மீது கடமையாகும். காரணம் அவ்விருவருக்கும் இடையே பிணக்கு ஏற்படாமல் கருத்தொற்றுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.